Thursday, October 15, 2020

“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” வழிகாட்டிப் புத்தகத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வெளியீடு செய்கிறது

 பத்திரிகைச் செய்தி                                                                                             3.10.2020

 
வருடாந்திர பசுமை வாரத்தை அனுசரிக்கும் விதமாக பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இன்று 
“வீட்டுத்தோட்டத்தில் பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள்” என்ற வழிகாட்டிப் புத்தகத்தை வெளியீடு செய்துள்ளது. இருபது பக்கங்களைக் கொண்ட இந்தப் புத்தகம் முழு வண்ணத்தில் தமிழ், மலாய், ஆங்கிலம், சீனம் என்று 4 மொழிகளிலும் வெளியிடப்பட்டுள்ளது என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கூறினார்.

கோவிட் 19 பெருந்தொற்றின் காரணமாக வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தில் பெரும்பாலானோர் சொந்தமாகக் காய்கறிகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.  அரசாங்கம் மக்களைத் தங்கள் வீட்டுக்கு அருகாமையிலும் பயிர்களை வளர்க்கத் தூண்டுவதோடு நகர்ப்புற பயிர் வளர்ப்புத் திட்டத்தையும் ஊக்குவித்து வருகிறது.  

பயிர்களைப் பூச்சிகள் தாக்குவது இயற்கையே.  இதனைக் கையாளும் முறைகளை அறிந்திராத பயனீட்டாளர்கள், பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்பு கொண்டு தங்கள் பயிர்களைத் தாக்கும் பூச்சிகளுக்கு இயற்கையான முறையில் தீர்வு காண்பது எப்படி என்று தொடர்ந்து ஆலோசனைகளைப் பெற்று வருகின்றனர். இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காணவும், பூச்சிகளை அழிப்பதற்காகப் பயனீட்டாளர்கள் நச்சு இரசாயனங்களை உபயோகிப்பதைத் தடுக்கும் பொருட்டும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் இந்த  வழிகாட்டிப் புத்தகத்தை வெளியிட்டுள்ளது.  பசுமை நடவடிக்கை வாரத்திற்கான கருப்பொருளும் இதுவேயாகும்.

நம் தோட்டத்திற்குள் இருக்கும் தீமை செய்யும் பூச்சிகள் மற்றும் இவற்றைப் பிடித்துத் தின்னும் நன்மை செய்யும் பூச்சிகள் ஆகியவற்றின் பங்கு பற்றி இந்த வழிகாட்டி விவரிக்கிறது.  அதோடு, பூச்சிகளை விரட்டுவதற்காக நாமாகவே எப்படிச் சொந்தமாக பூச்சி விரட்டி கரைசல்களைத் தயாரிப்பது, நன்மை செய்யும் பூச்சிகளை எப்படி நம்முடைய தோட்டத்திற்குள் வரவழைப்பது என்றும் இந்த வழிகாட்டியில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

பினாங்கு பயனீட்டாளர் சங்கம், நிலைபேறான வாழ்க்கை முறை பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பகிர்ந்து கொள்ளுதல் மற்றும் கூட்டாக இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை ஆதரிக்கும் பொருட்டும், விதைகளைப் பகிர்ந்துகொள்ளுதல் மற்றும் தோட்டம் போடுதல் குழுமங்களை உருவாக்கி இயங்கி வருகிறது.  இதனோடு நின்றுவிடாமல், நச்சுத்தன்மையுள்ள, ஆபத்தான பூச்சிக்கொல்லிகளைத் தடை செய்யுமாறும் அரசாங்கத்தை வலியுறுத்தி வருகிறது.  நம் எதிர்கால சந்ததியினர் நச்சுப் பாதிப்புகளுக்கு ஆளாகிவிடாமல் இருப்பதற்கு இது அவசியமாகும் என்றார் முகைதீன்.

உலகம் முழுக்க பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கிளைபோசேட் மற்றும் கிளைபோசேட் சார்ந்த களைக்கொல்லிகளைத் தடை செய்யுமாறு கடந்த வாரம் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை மனு ஒன்றினைச் சமர்ப்பித்தது. இந்த வேளாண்-இரசாயனங்கள் யாவும் உயிரினங்களையும், சுற்றுச்சூழலையும் தொடர்ந்து நச்சுத்தன்மைக்கு உள்ளாக்கி வருகின்றன.  இந்த நச்சுகளைப் பயன்படுத்துவதை நாம் நிறுத்த வேண்டும்.  அதனோடு இவற்றின் உற்பத்தி மற்றும் விற்பனையை நிறுத்துவதற்கும் கோரிக்கைகளை விடுக்க வேண்டும்.

உலகில், பெரும்பாலான பயிர்களுக்கான மகரந்தச் சேர்க்கை இயற்கை முறையில் பூச்சிகளாலேயே செய்யப்படுகின்றன. பூச்சிக்கொல்லிகள் தொடர்ந்து பயன்படுத்தப் படுமேயானால், நாம் நன்மை செய்யும் பூச்சிகளையும் மகரந்த சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளையும் கொன்று நம்முடைய உணவுத் தேவைக்கு நாமே உலை வைத்துவிடுவோம்.

உணவுப் பாதுகாப்பும், தங்குத் தடையின்றி உணவு கிடைப்பதும் நம் வாழ்வின் தேவையாகும்.  நமக்குத் தேவையான பயிர்களைச் சொந்தமாக வளர்ப்பதே இதனை எளிதில் நிறைவேற்றிக் கொள்ளும் வழியாகும்.  பகிர்ந்து வாழ்ந்த நம்முடைய பாரம்பரிய வாழ்க்கை முறையை திரும்பக் கொணரவும், நம் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்து கொள்ள நாமே பயிர் செய்யவும், நாம் உற்பத்தி செய்யும் காய்கறிகளை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்ளவும், பயிரிடுதல் தொடர்பாக நம்மிடமுள்ள தகவல்களைப் பகிரவும் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தோடு இணைந்து செயல்படுங்கள்.  



தொடர்புக்கு : CAP MARKETING SECTION :  04-8283511

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்


Attachments area

Tuesday, May 26, 2020

தேனீக்கள் உலகக் காப்பாளன் - தேனீக்கள் தினம் 2020

றைவனின் திருவடியின் நிழலின் அழகை இலயித்துப் பாடுகையில், தாமரை மலர்கள் பூத்துக் குலுங்கி தேன் எடுக்க உலா வரும் வண்டுகளின் ரீங்காரம் பரவி இலங்கும் அழகிய தடாகத்தைக் காட்டாகக் காட்டுவார் பாவுக்கரசரான திருநாவுக்கரசர். 

இயற்கையானது,  பரந்து விரிந்து பூத்துக் காயாகிப் பின்னர் கனியாகி உலகுக்கும் உயிர்களுக்கும் கனிவளங்களைத் தரும் அளப்பரிய செயலைச் செய்ய பெரும்புள்ளியாய் திகழ்வது தேனீக்கள் என்னும் கணுக்காலிகளே. குமூகப் பூச்சியினமான தேனீக்களின் பங்கு ஞால இயக்கத்திற்கு மிகவும் அளப்பரியது. தேனிக்களானது மலருக்கு மலர் சென்று பூந்துகள் எனப்படும் மகரந்தத்தைச் சேகரிக்கையில் அவற்றைப் பூவிலிருந்து பிற பூவுக்குக் கடத்துவதால் பூக்கள் சூலுறுகின்றன. கருவடைந்த பூக்கள் காயாகி பின் கனிகின்றன. 

ஓய்வே இல்லாது சுறுசுறுப்பாய், வாழும் காலத்தில் தேனைத் தேடி அலையும் தேனீக்கள் 28 முதல் 35 நாட்கள் வாழ்கின்றன. விடாமுயற்சி, ஒற்றுமை, சுறுசுறுப்பு, தலைமைக்குக்  கட்டுப்படும் பாங்கினைத் தேனீக்கள் நமக்கு கற்றுக்கொடுக்கின்றன. இந்தக் கணுக்காலிகள் ஒரு லட்சம் மீட்டர் வரை பயணிக்கும் ஆற்றல் கொண்டவை. உலகத்தில் மிகச் சிறந்த மருந்தாய்
விளங்கும் தேனைச் சேகரித்து அஃது உயர்ந்ததென காட்டுவதற்கே மரக் கொம்பில் தேன்கூட்டைக் கட்டி வாழ்கின்றன. 


இவ்வாறு, பல தூரம் வரை சென்று தேனை உறிஞ்சி பிற தேனீக்களின் உற்பத்திக்குப் பாடுபடும் தேனீக்கள் இன்று வந்த வழி அறியாது, திணறி தலை கிருகிருத்து, இறக்கும் நிலையில் இருக்கின்றன. மனிதர்களின் அளவில்லாத சுயநலப் போக்கிற்காகத் தாவரங்கள் மீது தெளிக்கப்படும் இராசயன பூச்சிக் கொல்லிகள் உலக இயக்கத்திற்கு ஊன்றுகோளாய் விளங்கும் தேனீக்களைக் கிட்டத்தட்ட சுயநினைவை இழக்கச்செய்து தம் கூட்டிற்குச் செல்ல வழி தெரியாமல் வாடி இறக்கச் செய்கின்றன. அழிந்து வரும் உயிரினங்களின் பட்டியலில் இன்று தேனீக்கள் ! முன்பு ஒரு மன்னனையோ அல்லது தலைவனையோ சிறப்பித்துக் கூறுகையில் அவன் தேனீக்கள் நிறைந்த புலத்தைச் சேர்ந்தவன் என ஒப்பிட்டுக் காட்டுவதுண்டு. தேன் நிறைந்த இடம் என்பது ஒரு இருப்பிடத்தின் வளத்தைக் காட்டக் கூடியதாகும்.

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆர் அளவின்றே சாரல் கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே
குறுந்தொகை- தேவகுலத்தார்


என்கிற குறுந்தொகை பூமி, வானம், பரந்த கடலைவிடவும் பெரியதாகவும் உயர்ந்ததாகவும் ஆழமானதாகவும் தேனீக்கள் தேன் எடுக்கும் நாடனோடு கொண்ட காதல் என பகர்கின்றது. தலைவனின் வளமையைக் காட்டும் பொருட்டுத் தேனீக்கள் நிறைந்த நாடன் என்பதில், தேனீக்கள் வளப்பத்திற்கு வித்திடும் பூச்சியினம் என்பதனை நம்மால் அறிய முடிகின்றது. இருந்தும், இன்று அதன் அழிவால் உலகம் செயலை இழக்கவும் நேரிடலாம் என்பதே உண்மை. மகரந்த சேர்க்கை நடவாது, தாவரங்கள் இனப்பெருக்கம் தடைப்படும். 

இளவேனிற் காலத்தில் மரங்களெல்லாம் பூத்துக் காய்த்துக் குலுங்கும் அரிய காட்சியினை நாம் இழக்கப் போகின்றோம். தேனீக்கள் உலகக் காப்பாளன். மனிதர்கள் இயற்கையோடு ஒன்றி வாழாது, செயற்கை தன்மைக்குப் புலம் பெயர்வதால், பெரும் அனர்த்தத்தை உருவாக்குகிறார்கள். தேனீ நண்பன் வெறும் பூச்சியினம் அன்று. அவன்  தாவரங்களின் சேர்க்கைக்கு அம்பெய்தும் மது உண்ணும் மன்மதனாவான். 

மனித இனம் தேனீக்களுக்கு இழைக்கும் தீங்கினைச் சுட்டிக் காட்டுவதற்காக இன்று தேனீக்களுக்கும் விழா எடுக்க வேண்டியுள்ளது. தேனீக்களைக் காப்போம். உலகத்தை இயல்பாக இயங்கவிடுவோம். தேனீக்கள் தினம் என்று ஒரு நாளோடு தேனீக்களை அடக்கிவிடாது, அதனை உயிர் கொண்டு வாழவிடுவோம். தேனீக்கள் தின வாழ்த்துகள்.